
உச்ச நீதிமன்றத்தின் வெளியே வாயில் அருகே இருந்த சாக்கடையை கையால் சுத்தம் செய்வதாகக் கூறி, எழுந்த புகார்களால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் எஃப் வாயில் (Gate F) வெளியே உள்ள சாக்கடையை, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி, வெறும் கைகளால் சுத்தம்செய்ய சிறுவன் உள்பட தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது.
விடியோ சான்றுகளுடன் அளிக்கப்பட்ட புகார், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறியதாக எச்சரித்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.
இந்தச் சம்பவத்தின் மூலம் நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்படுவது தெரிவதாக மூத்த வழக்குரைஞர் கே. பரமேஸ்வர் கூறினார்.
சாக்கடையை கைகளால் சுத்தம்செய்ய சிறுவன் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கோரியதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், காவல்துறையோ பொதுப் பணித் துறையோ உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, இது சட்ட மீறல் மட்டுமல்ல; அரசியலமைப்பை மீறுவதாகும் என்றும் கூறினார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரூ.5 லட்சம் அபராதத்தை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க: ரூ.2,796 கோடி மோசடி வழக்கு! அனில் அம்பானி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!