
ரியோ டி ஜெனிரோ: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் உலக அமைதி, பாதுகாப்பு குறித்த சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் சர்வதேச சீர்திருத்தம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் உருவெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவின் பஹல்காமில் தீவிரவாதிகள் கோழைத்தனமான தாக்குதலை நடத்தினர். இது இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பஹல்காம் தாக்குதலை கண்டித்த பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.