himachal-wedding-edu

ஹிமாசலப் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். மணப்பெண்ணும் முழு சம்மதத்துடன் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துகொண்டார்.

கிராம மக்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஹிமாசலப் பிரதேசம் சிர்மெளர் மாவட்டத்திற்குட்பட்ட ஷில்லாய் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். ஹட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்கள், தங்களின் பாரம்பரிய முறைப்படி ஒரே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணப்பெண் சுனிதா செளஹான் மற்றும் மணமகன்கள் பிரதீப் – கபீல் நேகி ஆகிய மூவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். இதில் எந்தவித அழுத்தங்களையும் தாங்கள் சந்திக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

ஹட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஹிமாசலப் பிரதேசம் – உத்தரகண்ட் மாநில எல்லைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்கள் எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர்.

இந்த சமூகத்தில் ஒரு பெண், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம். பல நூற்றாண்டுகளாக இந்த மரபு இவர்களிடையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஜோடித்ரா என இவர்கள் அழைக்கின்றனர்.

எனினும், கல்வியறிவு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு, பொருளாதார முன்னேற்றம் போன்றவை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த மக்களிடையே ஒரே பெண், ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் பழக்கும் குறைந்து வருகிறது.

இதுபோன்ற திருமணங்கள் அப்பகுதிகளில் புனிதமானதாகவும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் உள்ளது.

தற்போது பாந்தனா கிராமத்தில் சுனிதா செளஹான் என்ற மணப்பெண், பிரதீப் – கபீல் நேகி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு ஆண்களைத் திருமனம் செய்துள்ளார். அப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளில் நடக்கும் 5வது திருமணம் இதுவாகும்.

திருமணம் பெருமையானது

மணமகன் பிரதீப் அரசுத் துறையில் பணிபுரிந்து வருகிறார். அவரின் சகோதரர் கபீல் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

இது குறித்து மணமகன்களில் ஒருவரான பிரதீப் கூறுகையில், ”நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கிறோம். இதனால் நாங்கள் பெருமை அடைகிறோம். இது எங்களின் கூட்டு முடிவு. யாருடைய அழுத்தமும் இதில் இல்லை” எனக் குறிப்பிட்டார்.

கபீல் நேகி கூறுகையில், ”நான் வெளிநாட்டில் வேலைபார்ப்பவனாக இருக்கலாம். ஆனால், குடும்பத்துக்கு என்னுடைய ஆதரவை நான் உறுதி செய்வேன். ஒரே குடும்பமாக இருந்து எங்கள் மனைவிக்கு நிலையான அன்பை நாங்கள் வழங்குவோம். வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தின் நிலம் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் ஹட்டி பழங்குடி சமூகத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

சிர்மெளர் மாவட்டத்தில் உள்ள 450 கிராமங்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த ஜோடித்ரா வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.

இதையும் படிக்க | விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானி!

2 Himachal Brothers Marry Same Woman Embracing Polyandry

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest