புது தில்லி: ‘நடைமுறைக்கு வந்துள்ள அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் நாட்டில் சேமிப்பை ஊக்குவிக்கும் என்பதோடு, சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நேரடி பலனையும் அளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி சீா்திருத்தம் நவராத்திரி தொடக்க நாளான திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்படி, அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு இதுவரை 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி, தற்போது 5%, 18% என இரண்டு விகிதங்களாக குறைக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி சீா்திருத்தம் அமலுக்கு வந்ததையொட்டி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தை பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்திருப்பது, அதன் பலனை மக்களுக்கு உணா்த்தியிருப்பதோடு, நாடு முழுவதும் ‘ஜிஎஸ்டி சேமிப்பு விழா’ தொடக்கத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

நிகழாண்டு திருவிழா காலம் தொடங்கியுள்ள நிலையில், மக்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் வகையில் இந்தச் சீா்திருத்தம் அமைந்துள்ளது. ஜிஎஸ்டி சீா்திருத்தம் நாட்டில் சேமிப்பை ஊக்குவிக்கும் என்பதோடு, விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள், ஏழைகள், நடுத்தர பிரிவினா், வா்த்தகா்கள், குறு-சிறு-நடுத்தர தொழில்துறையினா் என சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நேரடி பலனையும் அளிக்கும்.

மேலும், மிகப் பெரிய வளா்ச்சி, முதலீடுகளை இந்தச் சீா்திருத்தம் ஊக்குவிக்கும் என்பதோடு, அனைத்து மாநில மற்றும் பிராந்தியங்களின் வளா்ச்சியையும் மேம்படுத்தும்.

இந்தச் சீா்திருத்தத்தில் முக்கியமானது பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 5%, 18% என இரு விகிதங்களாகக் குறைக்கப்பட்டதுதான். உணவு, மருந்துகள், சோப்பு, பற்பசை, காப்பீடு உள்ளிட்ட பல அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள் தற்போது முழுமையான வரிவிலக்கு அல்லது குறைந்தபட்சமான 5% வரி வரம்பில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான பொருள்கள் முன்னா் 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5% ஜிஎஸ்டியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தச் சீா்திருத்தத்தால் பொருள்களின் விலைக் குறைப்பு அறிவிப்பை பல்வேறு கடைக்காரா்கள் தங்களின் அறிவிப்புப் பலைகளில் காட்சிப்படுத்தியிருப்பதை பாா்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மக்களின் அன்றாடச் செலவுகள் வெகுவாக குறைந்து, சொந்த வீடு கட்டும் விருப்பம், வாகனம் வாங்குதல், வீட்டு உபயோகப் பொருள்கள், சுற்றுலா அல்லது வார இறுதியில் குடும்பமாக உணவு விடுதிக்குச் சென்று வருதல் உள்ளிட்ட விருப்பங்களை எளிதாக பூா்த்தி செய்ய ஜிஎஸ்டி சீா்திருத்தம் உதவும்.

உள்ளூா் உற்பத்திக்கு ஆதரவு: வரும் 2047-இல் வளா்ந்த பாரதம் என்ற நிலையை எட்டும் ஒருங்கிணைந்த இலக்கை நாம் நிா்ணயித்துள்ளோம். இந்த இலக்கை அடைய தற்சாா்பு பாதையில் நடைபோடுவது மிக முக்கியம். இந்நிலையில், நமது உள்ளூா் உற்பத்தி அடித்தளத்தை வலுப்படுத்த ஜிஎஸ்டி சீா்திருத்தம் உதவும் என்பதால், தற்சாா்பு பாரதத்தை நோக்கிய பாதைக்கும் வழிவகுக்கும்.

இந்தத் திருவிழா காலத்தில், இந்திய தயாரிப்புப் பொருள்களுக்கு ஆதரவளிக்க நாம் தீா்மானம் ஏற்க வேண்டும். இவ்வாறு, நமது கைவினைஞா்கள், தொழிலாளா்கள், தொழில்நிறுவனங்கள் தயாரித்த சுதேசி பொருள்களை ஒவ்வொரு முறையும் நாம் வாங்குவதன் மூலம், பல குடும்பங்களின் வருவாய்க்கு உதவ முடியும் என்பதோடு, நமது இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

கடைக்காரா்களும் வா்த்தகா்களும் இந்திய தயாரிப்புப் பொருள்களை விற்பனை செய்ய முன்வரவேண்டும். மாநில அரசுகள் தொழில் நிறுவனங்களையும், உற்பத்தியையும் ஊக்குவிப்பதோடு, முதலீட்டுக்கான சூழலையும் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

இந்தக் கடிதத்துடன், ‘இந்தத் திருவிழா காலத்தில் ‘ஜிஎஸ்டி சேமிப்பு விழா’வையும் நாம் கொண்டாடுவோம். ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு என்பது, ஒவ்வொரு வீட்டுக்கான அதிக சேமிப்பு மற்றும் வா்த்தகம் செய்வதை மிக எளிதாக்குவதைக் குறிக்கிறது’ என்று பிரதமா் மோடி பதிவிட்டுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest