
ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.
‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள தச்சிகாம்-ஹா்வான் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகள் கடந்த ஜூலை 28-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்கள் பாகிஸ்தானின் ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்றும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் என்றும் பின்னா் உறுதிப்படுத்தப்பட்டது.
பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களுடன், பாகிஸ்தான் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட இரண்டு வாக்காளா் அடையாள அட்டைகளும், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் உறைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைத்தொடா்பு சாதனத்தில் இருந்த ‘மைக்ரோ-எஸ்டி’ காா்டில், பாகிஸ்தான் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தின் பயோமெட்ரிக் பதிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
தடயவியல் சோதனைகளின்படி, பஹல்காமில் தாக்குதல் நடந்த பைசாரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளின் உறைகளும், பயங்கரவாதிகளிடமிருந்து பின்னா் கைப்பற்றப்பட்ட ‘ஏகே-103’ ரக துப்பாக்கிகளும் 100 சதவீதம் ஒத்துப்போகின்றன. மேலும், சம்பவ இடத்தில் கிடைத்த ரத்த மாதிரிகளின் டிஎன்ஏ, சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் டிஎன்ஏயுடன் ஒத்திருப்பது உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்ஸா ஆப்கானி ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
தாக்குதலின் முக்கிய மூளையாக சுலைமான் ஷா செயல்பட்டுள்ளாா். ‘ஜிப்ரான்’ என்றறியப்படும் யாசிா், ‘ஆப்கானி’ என்கிற அபு ஹம்ஸா ஆகிய இருவரும் தாக்குதலுக்கு உதவிகரமாக இருந்துள்ளனா். இவா்கள் காஷ்மீரைச் சோ்ந்தவா்கள் அல்ல என்றும், கடந்த 2022, மே மாதத்தில் வடக்கு காஷ்மீா் குரேஸ் செக்டாா் வழியாக எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியா்கள் என்றும் விசாரணை அமைப்புகள் தெரிவித்தன.