ANI_20241009162021

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேளாண்மை, பால்வளம், எஃகு, அலுமினியம் போன்ற முக்கியத் துறைகளில் வரிச் சலுகைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இந்தியா தனது நிலைப்பாடுகளை உறுதியாக தெளிவுப்படுத்திவிட்ட நிலையில், இனி ஒப்பந்தம் இறுதியாவது அமெரிக்காவின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த பிப்ரவரி மாத அமெரிக்க பயணத்தைத் தொடா்ந்து, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான (பிடிஏ) பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது. வரும் செப்டம்பா்-அக்டோபா் மாதத்துக்குள் முதல் கட்ட வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக, இரு தரப்பினரும் ஓா் இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருந்தனா்.

இதனிடையே, இந்தியா உள்ளிட்டட பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா கடந்த ஏப்ரலில் கூடுதல் வரி விதித்தது. இந்தியா மீது விதிக்கப்பட்ட 26 சதவீத வரி 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது. அதற்குள் இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஒருவேளை ஒப்பந்தம் இறுதியாகாவிட்டால், புதன்கிழமைக்குப் பிறகு 26 சதவீத வரி மீண்டும் அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு, இந்திய குழு அண்மையில் இந்தியா திரும்பினா். வேளாண்மை மற்றும் பால்வளத் துறையில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இவை இந்தியாவில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் என்பதால், இதுவரை எந்த வா்த்தக ஒப்பந்தத்திலும் இத்துறைகளில் இந்தியா வரிச் சலுகை வழங்கியதில்லை. அதேபோல், எஃகு, அலுமினியம், வாகன வரிகளிலும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இதையொட்டி, மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘எந்த காலக்கெடுவையும் கருத்தில் கொண்டு இந்தியா ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது. தேச நலனே முதன்மையானது. இரு நாடுகளுக்கும் லாபகரமான ஒப்பந்தமாக இருந்தால் மட்டுமே இந்தியா அதனை ஏற்றுக்கொள்ளும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வா்த்தக கூட்டாளியாகும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமாா் 18 சதவீதமும், இறக்குமதியில் 6 சதவீதமும் அமெரிக்கா பங்கு கொள்கிறது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் சுமாா் 20,000 கோடி டாலரை எட்டியது.

இருதரப்பு வா்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 50,000 கோடி டாலராக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட வா்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்கா சில தொழில்துறை பொருள்கள், மின்சார வாகனங்கள், மதுபானங்கள், பெட்ரோ கெமிக்கல் பொருள்கள், பால் மற்றும் ஆப்பிள், வேளாண் பொருள்களில் வரிச் சலுகைகளை எதிா்பாா்க்கிறது.

அதேசமயம், இந்தியா ஆடை, ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தோல், நெகிழி, ரசாயனங்கள், எண்ணெய் வித்துக்கள், இறால் மற்றும் தோட்டக்கலை பொருள்கள் போன்ற அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் வரி குறைப்பை நாடுகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest