
சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில், 2023-ல் நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உயிரிழந்த மாணவரின் தந்தை வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்திலும் வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வு, தேர்வு காரணமாக ஏற்படும் அழுத்தம், கல்வி நிறுவனங்கள் வழங்கத் தவறும் ஆதரவு ஆகிய காரணங்களாலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறினர்.
தொடர்ந்து, இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரையில், மாணவர் தற்கொலைகளைத் தடுக்க சில வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
-
மாணவர்களின் பெற்றோருக்கான விழிப்புணர்வு மற்றும் மனநலக் கல்வி
-
மாணவர்களிடம் தேர்வு தொடர்பான பயம், அழுத்தம் முதலானவற்றை நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
தேர்வு நேரங்களின்போது, மாணவர்களுக்கு உரிய ஆதரவளிக்கக் கூடிய முறையான பயிற்சிபெற்ற வழிகாட்டிகள் அல்லது ஆலோசகர்கள் நியமித்தல்
-
மாணவர்களுக்கான குறைதீர் முகாம்கள்
-
கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகள், விடுதிகள், பொது இடங்களிலும் தற்கொலைக்கு எதிரான தடுப்பு எண்கள் வைத்தல்
-
கல்வி நிறுவனங்களில், பாதிக்கப்படக்கூடிய அல்லது பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் தொடர்ந்து கண்காணிப்புடன்கூடிய கலந்துரையாடலும் இருத்தல் மற்றும் கலந்துரையாட ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்தல்
-
ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் ஆண்டுதோறும் இருமுறையாவது மனநல பயிற்சிக்கு செல்லுதல்
-
தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒரு தனிக்குழு அமைக்கப்பட வேண்டும்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
இதையும் படிக்க: புதைந்தும் உயிருடன் போராட்டம்! இரக்கமில்லா இஸ்ரேல்; கண்ணீருடன் காஸா!
Student suicides: Supreme Court issues comprehensive guidelines for prevention