
அமெரிக்க அரசால் வழங்கப்படாத, பாதுகாப்புத் துறை தொடர்பான தகவல்களை முன் அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம் என உறுதியளிக்குமாறு ஊடகவியலாளர்களை பென்டகன் வலியுறுத்தியிருக்கிறது.
வெளியிடுவதற்கு அனுமதி பெறாத தகவல்களையும் – வகைப்படுத்தப்படாத தகவல்களையும் செய்தியாக வெளியிடுவதைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழியில் இராணுவத் தலைமையகத்தில் உள்ள செய்தி சேகரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கையெழுத்திட வேண்டும் என்று பென்டகன் கூறியிருக்கிறது.
அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றாத பத்திரிகையாளர்கள் பென்டகனுக்குள் நுழைவதற்கான அனுமதியை, அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களும் இழக்க நேரிடும் என்று வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கான சுற்றறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஒரு தகவல் குறித்து செய்தி வெளியிடப்படுவதற்கு முன்பு, அது வகைப்படுத்தப்படாவிட்டாலும் கூட, அத்துறை தொடர்பான உரிய அதிகாரியால் பொது வெளியீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முன் அனுமதி இல்லாமல் செய்திகளை வெளிப்படுத்தக் கூடாது என்பது, சுதந்திரமான பத்திரிகைத் துறை மீது நடத்தப்படும் தாக்குதல் என்று பத்திரிகை சுதந்திரங்களுக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கண்டித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள், வழக்குகள் மற்றும் அரசு மீதான அழுத்தங்கள் காரணமாக பென்டகன் இந்த கட்டுப்பாடுகளைப் பிறப்பிக்கக் காரணமாகிறது என்றும் கூறப்படுகிறது.
நமது இராணுவத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட, முதலில் நம் அரசால் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றால், நாட்டு மக்கள், இனி பத்திரிகையாளர்களால் சேகரிக்கப்படும் செய்திகளை பெற முடியாது. அரசு அதிகாரிகள், மக்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை மட்டுமே மக்கள் தெரிந்துகொள்ள முடியும் என்று தேசிய பத்திரிகையாளர் மன்றத் தலைவர் மைக் பால்சாமோ கூறுகிறார். அசோசியேட்டட் பிரஸ்ஸின் தேசிய சட்ட நடைமுறை ஆசிரியர்களில் இவரும் ஒருவர். இது ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் எச்சரிக்கை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.