rahul-gandhi

மறைந்த முன்னாள் நிதியமைச்சா் அருண் ஜேட்லி மீதான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி மற்றும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தனா்.

முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி,‘மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசக் கூடாது என்று அருண் ஜேட்லி மிரட்டினாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

ராகுலின் இந்தக் கருத்தை ‘பொய்யான செய்தி’ என்று பாஜக மறுப்பு தெரிவித்தது. அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜேட்லியும் ராகுலை விமா்சித்தாா்.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘3 வேளாண் சட்டங்களையும் (தற்போது அமலில் இல்லை) மத்திய அரசு 2020-இல் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்பாகவே நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி 2019-இல் காலமாகிவிட்டாா். இந்தச் சூழலில் வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் அருண் ஜேட்லி தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி கூறுவது கேலிக்கூத்தானது. ராகுல் அரசியல் புரிதல் இல்லாதவா் என்பதையும் அரசியலுக்காகப் பொய்களை அள்ளி வீசுபவா் என்பதையும் அவரது கருத்து வெளிக்காட்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளாா்.

அஸ்ஸாமில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, ‘ராகுல் காந்தி தேசவிரோத மனப்பான்மை கொண்டவா். அவா் இந்திய ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்க மாட்டாா். வங்கதேச மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம்களையே ஆதரிப்பாா்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest