
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும்.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோயிலின் நடை திறக்கப்பட்டு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அந்தவகையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது.
தந்தரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து தீபாரதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நடை திறப்பையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் செய்யப்படவில்லை. கோயில் கருவறை சுத்தம செய்யும் பணி நடைபெற்றது.
கோயில் திறந்திருக்கும் 5 நாள்களும் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை மற்றும் தந்திரி தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
21-ம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. நடை திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.