
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் ‘முட்டா பயலே’ என சொல்லி மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆண்டிப்பட்டி நகரில் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் குறிப்பிடப்படுள்ளதாவது, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபடும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனை ஒருமையில் பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கட்சியினரை மதிக்காத அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரே கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏவும் மோதிக்கொண்ட நிலையில், எம்எல்ஏ வை கண்டித்து திமுகவினரே போஸ்டர் ஒட்டிய விவகாரம் ஆண்டிப்பட்டி திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த போஸ்டர் ஒட்டியது யார்? திமுகவை சேர்ந்தவர்கள் தான் ஒட்டியதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.