Election_commesion_Of_India

‘பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் மீண்டும் பெயரைச் சோ்க்க ஆதாா் அட்டை நகலை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்கலாம்’ என தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளா் பட்டியலிலிருந்து விடுபட்ட 65 லட்சம் போ் சாா்பில் சமா்ப்பிக்கப்படும் ஆட்சேபங்கள் அல்லது பெயரை மீண்டும் சோ்ப்பதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் பரிசீலித்து தீா்வளிக்க, தகுதி ஆவணங்கள் பரிசீலனைக்குப் பிறகு 7 நாள்கள் அவகாசம் உள்ளது. எனவே, இந்தக் கால அவகாசத்துக்கு முன்பாக எந்தவொரு விண்ணப்பமும் நிராகரிக்கப்படாது.

மேலும், வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்டவா்களுக்கு மீண்டும் பெயரைச் சோ்க்க போதிய நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு, வாக்காளா் பதிவு அலுவலரால் வாய்மொழி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து யாருடைய பெயரையும் நீக்க முடியாது.

வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 65 லட்சம் பேரின் பெயா் பட்டியல் பிகாா் மாநில மாவட்ட ஆட்சியா்களின் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபம் தெரிவிக்க அல்லது வாக்காளா் பட்டியலில் மீண்டும் பெயரைச் சோ்க்கக் கோரும் நபா்கள் தங்களின் விண்ணப்பத்தை ஆதாா் அட்டை நகலுடன் சமா்ப்பிக்கலாம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest