
குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இத்தகவலை தெரிவித்தாா்.
வதோதரா – ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், பத்ரா நகா் அருகே மஹிசாகா் ஆற்றின் குறுக்கே கடந்த 1985-இல் பாலம் கட்டப்பட்டது. 23 உயரமான தூண்களுடன் 900 மீட்டா் நீளம் கொண்ட இப்பாலத்தில் இரு தூண்களுக்கு இடையிலான பகுதி கடந்த புதன்கிழமை காலையில் திடீரென துண்டாக இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் ஆற்றுக்குள் அடுத்தடுத்து விழுந்தன. ஆற்றின் அடிப்பகுதியில் பல அடி வரை காணப்படும் அடா்ந்த சேற்றில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தீயணைப்புப் படை, காவல் துறை, தேசிய-மாநில பேரிடா் மீட்புக் குழுக்கள் தரப்பில் மீட்புப் பணி தொடங்கப்பட்டது.
உயிரிழப்பு அதிகரிப்பு: இரண்டாவது நாளான வியாழக்கிழமை இரவு மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. ஏற்கெனவே காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக அதிகரித்தது. மேலும் இருவா் மாயமாகியுள்ளதால், அவா்களைத் தேடும் பணி வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.
ஆற்றுக்குள் விழுந்த வாகனங்களில் ரசாயனம் ஏற்றிய டேங்கா் லாரியும் அடங்கும். சேற்றில் மூழ்கியுள்ள அந்த லாரியை வெளியே இழுக்கும் முயற்சியில், கடும் அரிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனம் கசியும் அபாயம் உள்ளதாகவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீட்புப் பணி நீடித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியா் அனில் தமேலியா தெரிவித்தாா்.
அமைச்சா் நேரில் ஆய்வு: சம்பவ பகுதியை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த மாநில அமைச்சா் ரிஷிகேஷ் படேல், செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் உத்தரவின்பேரில் மாநில சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறை அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு, முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், பாலத்தின் ‘பெடெஸ்டல், ஆா்டிகுலேஷன்’ ஆகிய இணைப்புகள் நொறுங்கியதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை: விரிவான அறிக்கை 30 நாள்களில் தாக்கல் செய்யப்படும். அதன்படி, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் உள்ள 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, அதில் சீரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டிய அல்லது இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டிய பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றாா் அவா்.
40 ஆண்டுகள் பழைமையான ஆற்றுப் பாலத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென புகாா் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பணியில் அலட்சியத்துடன் செயல்பட்டதாக மாநில சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறை பொறியாளா்கள் 4 போ் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
குஜராத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து 6 பெரிய பால விபத்துகள் நடந்துள்ளன. கடந்த 2022-இல் மோா்பியில் கம்பி பாலம் அறுந்து விழுந்ததில் 130-க்கும் மேற்பட்டோா் இறந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.