
வாஷிங்டன்: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும், பிரதமர் மோடியுடன் பேச ஆவலாக உள்ளேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், ட்ரம்புடன் பேச நானும் ஆவலாக உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனல்டு ட்ரம்ப், உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதனால், பதிலுக்கு பதில் வரி விதிக்கப்படும் எனக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். இதன்படி, இந்திய பொருட்களுக்கு 25% வரி விதித்தார். இதனிடையே, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், சில விஷயங்களில் உடன்பாடு எட்டப்படாததால் இழுபறி நீடித்தது.