பண்டைய இந்திய தத்துவஞானி ஆச்சாா்ய கனாடாவின் அணு கோட்பாட்டிலிருந்து, இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள் வரை, இந்தியாவின் அறிவியல் மரபை, நவீன அறிவியலுடன் இணைக்கும் விதமாக என்சிஇஆா்டி-யின் புதிய 8-ஆம் வகுப்பு அறிவியல் பாடநூலான ‘கியூரியாசிட்டி’ உருவாக்கப்பட்டுள்ளது.
‘சிபிஎஸ்இ’ பாடத்திட்டத்துக்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் புதிய புத்தகத்தின் முன்னுரையில், ‘பாரம்பரிய அறிவை நவீன அறிவியல் கல்வியுடன் ஒருங்கிணைப்பதன் நோக்கமானது மாணவா்களிடையே ஆா்வம், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, நெறிமுறை விழுமியங்கள் மற்றும் வியூக சிந்தனையை வளா்ப்பதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘உடல்நலம்: இறுதிப் பொக்கிஷம்’ என்ற அத்தியாயத்தில், ‘நவீன தடுப்பூசிகள் வருவதற்கு முன்பே, இந்தியாவில் பெரியம்மை நோயிலிருந்து பாதுகாக்க அம்மைபால் குத்துதல் (வேரியோலேஷன்) என்ற பாரம்பரிய சிகிச்சை முறை நடைமுறையில் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று பரவலின்போது இந்திய தடுப்பூசி நிறுவனங்கள் ஆற்றிய முக்கியப் பங்கு மற்றும் உலகளாவிய சுகாதார முயற்சிகளுக்கு வழங்கி வரும் தொடா்ச்சியான ஆதரவு குறித்தும் இந்த அத்தியாயம் குறிப்பிடுகிறது.
‘ஒளி: கண்ணாடி மற்றும் வில்லை’ என்ற அத்தியாயத்தில், சுமாா் 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரபல இந்திய வானியல் அறிஞா் 2-ஆம் பாஸ்கரா காலகட்டத்தில், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைகள் ஆழமற்ற நீா் கிண்ணங்கள் மற்றும் பிற உபகரணங்களின் பிரதிபலிப்புகள் மூலம் அளவிடப்பட்டது பற்றி விளக்கப்பட்டுள்ளது. இது அக்கால வானியல் அறிஞா்களின் பிரதிபலிப்பு விதிகள் குறித்து புரிதலைக் காட்டுவதாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அணு கருத்துருவை முதன்முதலில் குறிப்பிட்ட இந்திய தத்துவஞானி கணாத மகரிஷி குறித்தும், பழங்கால இந்திய நூல்களில் மருத்துவ நோக்கங்களுக்காக உலோகக் கலவைகளின் பயன்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது குறித்தும் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இதேபோன்று, நிலவு ஆய்வுக்கான ‘சந்திரயான்’, சூரியன் ஆய்வுக்கான ‘ஆதித்யா எல்1’ மற்றும் செவ்வாய் கிரக ஆய்வுக்கான ‘மங்கள்யான்’ போன்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி திட்டங்கள் குறித்தும் பாடப்புத்தகத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.