
தான் சமைக்கும் உணவு மற்றும் அணியும் உடைகள் மீது குறைகூறுவதாக கணவர் மீது அவரது மனைவி சுமத்திய வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.
மும்பையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஒருவர், தனது மனைவி சமைக்கும் உணவு, அவர் அணியும் உடைகள் குறித்து கடுமையான கருத்துகளைக் கூறுவதாக, அவர் மீது அவரின் மனைவி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உணவு மற்றும் உடை மீதான எரிச்சலூட்டும் கூற்றுகளை கொடுமையான அல்லது துன்புறுத்தும் செயல்கள் என்று கூற முடியாது. அவ்வாறு இருக்கையில், கணவரையோ அவரது குடும்பத்தினரையோ விசாரணைக்கு கேட்டுக்கொண்டால், அது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும் என்றுகூறி, வழக்கை ரத்து செய்தது.
இதனிடையே, கணவர் மீதான மனைவியின் குற்றச்சாட்டுகளிலும் உண்மைத்தன்மை இல்லாதது தெரிய வந்தது. கணவருக்கு இருந்த உடல்நலப் பிரச்னைகள் குறித்து முன்னரே தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், திருமணத்துக்கு முன்னதாகவே தான் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் குறித்து மனைவிக்கு கணவர் தகவல் பரிமாற்றத்தில் கூறியிருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், திருமணத்துக்கு முன்னரே கணவரின் மருத்துவம் சார்ந்தவை அவருக்கு தெரிந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, தீபாவளியன்று ஒரு ஃபிளாட் வாங்க ரூ. 15 லட்சம் கேட்டதாகவும் மனைவி குற்றம் சாட்டினார். ஆனால், ஏற்கெனவே கணவரிடம் ஒரு ஃபிளாட் இருக்கும்போது ஏன் கேட்கிறார்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.