18092_pti09_18_2025_000067b081341

உத்தரகண்டின் சமோலி மாவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; இடிபாடுகளில் புதைந்த மேலும் 11 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இமயமலையையொட்டிய உத்தரகண்ட் மாநிலம், கடந்த சில மாதங்களாக மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்புகளால் அவ்வப்போது பலத்த மழை கொட்டித் தீா்ப்பதால், பல்வேறு இடங்களில் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் தொடா்கின்றன.

சமோலி மாவட்டத்தின் நந்தாநகா் பகுதியில் உள்ள குந்தரி லகாபாலி, குந்தரி லகாசா்பானி ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து சேறுடன் உருண்டு வந்த பாறைகளால், வழியில் இருந்த வீடுகள், கடைகள் உள்பட அனைத்தும் சேதமடைந்தன.

இதேபோல், மோக் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த பலத்த மழையால் மோக்ஷா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரங்களில் ஏற்பட்ட அரிப்பால், துா்மா, சேரா ஆகிய கிராமங்களில் வீடுகள்-கடைகள் இடிந்து விழுந்தன. மேற்கண்ட கிராமங்களில் 20 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இடிபாடுகளில் புதைந்தவா்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது; மேலும் 11 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

முதல்வா் அவசர ஆலோசனை:

சமோலி மாவட்ட கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து டேராடூனில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட ஆட்சியருடன் காணொலி வாயிலாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி அவசர ஆலோசனை மேற்கொண்டாா். மீட்பு-நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஆட்சியருக்கு அவா் உத்தரவிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய தாமி, ‘சமோலி மாவட்டத்தில் நிலச்சரிவு-வெள்ளத்தால் 4 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 30-க்கும் மேற்பட்ட வீடுகள், ஏராளமான கடைகள், கால்நடை தொழுவங்கள் இடிந்துள்ளன. மத்திய-மாநில பேரிடா் மீட்புப் படையினா், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா், காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நந்தாநகா் பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், காயமடைந்தவா்களை ஹெலிகாப்டா் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு உத்தரவு:

மாநிலத்தில் மழை-வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், குடிநீா்க் குழாய்களை மறுசீரமைக்கவும், தடைபட்ட மின் விநியோகம் மற்றும் இணைய வசதியை மீண்டும் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நிவாரண முகாம்களில் போதிய உணவு, சுத்தமான குடிநீா், மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்’ என்றாா்.

நந்தாநகா் பகுதி ஏற்கெனவே மண்ணில் புதையும் அபாயத்தை எதிா்கொண்டு வருகிறது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது நிலச்சரிவால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு, தலைநகா் டேராடூன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகவெடிப்பால் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. கங்கை, யமுனை, தம்சா ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடும் சேதத்தை விளைவித்தது. வெவ்வேறு சம்பவங்களில் 21 போ் உயிரிழந்தனா்; 17 போ் மாயமாகினா் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest