
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் `பாரத் ஜோடோ’ எனப்படும் ஒற்றுமை யாத்திரை நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு இருந்தார். அப்போது கடந்த 2022 டிசம்பர் மாதம் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, `இந்திய சீன எல்லை பிரச்சனையில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டது.
குறிப்பாக அருணாச்சல் பிரதேசம் உள்ளிட்ட இந்தியா சீனா எல்லைகள் அமைந்திருக்கக் கூடிய பகுதிகளில் சீன ராணுவத்தினர் தொடர்ந்து இந்திய ராணுவத்தினரை தாக்கி வருகின்றனர். ஆனால் அவர்களை தடுக்க பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. அது மட்டும் இல்லாமல் இந்தியாவின் 2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடத்தை சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருக்கிறது. அதை தடுக்கவும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

இந்த பேச்சுக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் லக்னோ கீழமை நீதிமன்றத்தில் வழக்கானது நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி நேரில் ஆஜராக கீழமை நீதிமன்ற நீதிபதி சம்மன் அனுப்பி இருந்தார்.
இந்த சம்மனுக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.
அப்போது எடுத்த உடனேயே ராகுல் காந்தியை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதிகள், “இந்தியாவின் நிலப்பரப்பை 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என ராகுல் காந்திக்கு எப்படி தெரியும்? இதற்கான வலுவான ஆதாரங்கள் அவரிடம் இருக்கிறதா? பொறுப்பான ஒரு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இதை நாடாளுமன்றத்தில் பேசாமல் பொதுவெளியில் பேசுவது ஏன்? சமூக ஊடகங்களில் இது தொடர்பாக கருத்துக்களை பதிவிடுவது ஏன்?” என கேள்விகளை எழுப்பினார்கள்

ஒரு உண்மையான இந்தியன் இப்படி நிச்சயமாக பேச மாட்டார்!
அது மட்டும் இல்லாமல், `ஒரு உண்மையான இந்தியன் இப்படி நிச்சயமாக பேச மாட்டார்’ எனவும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்தனர். அதற்கு ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “ஒருவரை இப்படியான அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து தொடர்ச்சியாக துன்புறுத்துவதை ஏற்க முடியாது” என கூறினார்
அதற்கு கடுகடுப்பான முகத்துடன் பேசிய நீதிபதிகள், “உங்களுக்கு அரசியல் சாசனம் பேச்சுரிமை வழங்கியிருக்கிறது. ஆனால் அதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்காதீர்கள்” என கூறினர்.
பிறகு லக்னோ நீதிமன்றத்தில் நடைபெறும் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை மூன்று வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.