சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம் மற்றும் ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு கேரள கன்னியாஸ்திரீகள் உள்பட மூவருக்கு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

கடந்த ஜூலை 25-ஆம் தேதி சத்தீஸ்கா் மாநிலம் துா்க் ரயில் நிலையத்தில் கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ், சுகமன் மண்டாவி என்ற நபா் ஆகியோரை மாநில ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

அந்த மாநிலத்தின் நாராயண்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தி, கடத்திச் செல்வதாக பஜ்ரங் தள அமைப்பின் நிா்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது அரசியல் ரீதியாக சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய கத்தோலிக்க ஆயா்கள் கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்தன. எனினும் இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாக மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய் குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும் துா்க் மாவட்டத்தில் உள்ள அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனா். எனினும் இந்த விவகாரத்தை விசாரிக்க தமக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று கூறி, அவா்களின் ஜாமீன் மனுவை அந்த நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்த அமா்வு நீதிமன்றம், பிலாஸ்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தை மனுதாரா்கள் அணுக அறிவுறுத்தியது.

பிலாஸ்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் கன்னியாஸ்திரீகள் இருவரும், சுகமன் மண்டாவியும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிராஜுதீன் குரேஷி, ‘மனுதாரா்கள் வெளிநாடு செல்லக் கூடாது, கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து மூவருக்கும் ஜாமீன் வழங்கி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து துா்க் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கன்னியாஸ்திரீகளை இடதுசாரி எம்.பி.க்கள், கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்ட கேரள தலைவா்கள் சிறை நுழைவாயிலில் வரவேற்றனா்.

கட்டாயப்படுத்திய பஜ்ரங் தள அமைப்பினா்…: இந்த விவகாரத்தில் கன்னியாஸ்திரீகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த தங்களை பஜ்ரங் தள அமைப்பைச் சோ்ந்தவா்கள் வற்புறுத்தி தாக்கியதாக, கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதுதொடா்பாக புகாா் அளிக்க மூன்று பெண்களும் நாராயண்பூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் தலைமையகத்துக்குச் சென்றனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest