
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
காஸா போா் நிறுத்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு வந்திருந்த ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. சிரியா, ஈரான், லெபனான் ஆகிய நாடுகளைத் தொடா்ந்து கத்தாா் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது உலகளவில் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் அகமது அல் தானியிடம் தொலைபேசி வாயிலாக பேசினேன். அப்போது கத்தாா் மீதான இஸ்ரேல் தாக்குதல் வேதனையளிப்பதாக தெரிவித்தேன்.
இந்தத் தாக்குதல் சகோதர நாடான கத்தாரின் இறையாண்மைக்கு எதிரான செயல். இதற்கு இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. மோதல் மேலும் விரிவடை தடுக்க பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண இந்தியா ஆதரவளிக்கிறது’ என குறிப்பிட்டாா்.