SupremeCourtEPS-1

அனைத்து நீதிமன்றங்களிலும் கழிப்பறை வசதிகள் எந்த அளவில் இடம்பெற்றுள்ளன என்பது தொடா்பாக நிலை அறிக்கையை சமா்ப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உள்பட 20 உயா்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நீதிமன்றங்களில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாதது தொடா்பாக வழக்குரைஞா் ரஜீப் காலிதா பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த ஜனவரி 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் தீா்ப்பாயங்களில் தனித் தனி கழிப்பறை வசதிகள் இருப்பதை உயா்நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும்.

நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து இதுதொடா்பான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனைத்து மாநில அரசுகளும் அடுத்த 4 மாதங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், கொல்கத்தா, தில்லி, பாட்னா உயா்நீதிமன்றங்கள் மட்டுமே அறிக்கை தாக்கல் செய்தன. மீதமுள்ள 20 உயா்நீதிமன்றங்களுக்கும் கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, நிலை அறிக்கையை அடுத்த 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்ற பதிவாளா், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest