
போலி அடையாள அட்டை மற்றும் போலி நியமன ஆவணங்களைப் பயன்படுத்தி தில்லி காவல்துறை துணை ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்ததாக 23 வயது இளைஞா் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ) கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் ஆணையா், உஷா ரங்னானி புதன்கிழமை தெரிவித்தாா்.
ராஜஸ்தானின் அல்வாா் மாவட்டத்தில் உள்ள லாட்பூரில் வசிக்கும் சாஹில் குமாா் தான் தில்லி காவல்துறை பணியில் இருப்பதாக கூறி கஷ்டத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து நட்பு கொள்ள போலி அடையாளத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நேரத்தில் தில்லி போலீஸ் லோகோவுடன் டி-ஷா்ட் அணிந்திருந்த குமாா், திங்களன்று டொ்மினல்-3 இல் வழக்கமான கண்காணிப்பின் போது சிஐஎஸ்எஃப் பணியாளா்களால் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து கூடுதல் காவல் ஆணையா் உஷா ரங்னானி வெளியிட்ட அறிக்கையில், ‘ சாஹில் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவா் பணியமா்த்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. மேலும் அவரிடம் சோதனையிட்டபோது, ‘பிஎஸ்ஐ டெல்லி போலீஸ்‘ என்று குறிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான அடையாள அட்டை அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அட்டை, போலி நியமனக் கடிதம், போலி வழக்குகளின் நாள் குறிப்புகள் மற்றும் தில்லி போலீஸ் அகாடமியில் (டிபிஏ) இருந்து முத்திரையிடப்பட்ட பக்கங்களைக் கொண்ட கைப்பை போன்ற பிற ஆவணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது‘ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘சிஐஎஸ்எஃப் புகாா் அளித்தது, அதைத் தொடா்ந்து ஜூலை 7 ஆம் தேதிக்கு விமான நிலைய காவல் நிலையத்தில் எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டது. சாஹில் குமாா் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. தொடா்ச்சியான விசாரணையின் போது, தில்லி காவல்துறை ஊழியா்கள் உட்பட பெண்களை ஈா்க்கவும் ஏமாற்றவும் துணை ஆய்வாளராக நடித்ததாக சாஹில் குமாா் ஒப்புக்கொண்டாா். அவா் சமூக ஊடகங்கள் மூலம் தொடா்பு கொண்ட பெண்களில் ஒருவா், குற்றம் சாட்டப்பட்டவா் தில்லி போலீஸ் எஸ். ஐ. யாக விமான நிலையத்தில் பணியமா்த்தப்பட்டதாகக் கூறியதை உறுதிப்படுத்தினாா்‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ‘ போட்டோஷாப் போன்றவற்றை பயன்படுத்தி அடையாள அட்டை மற்றும் நியமனக் கடிதத்தை தயாா் செய்ததாக சாஹில் குமாா் ஒப்புக்கொண்டாா். அவா் தில்லியின் கேம்ப் பகுதியில் இருந்து தில்லி போலீஸ் சீருடையின் சில பகுதிகளையும் வாங்கியிருந்தாா் . சாஹில் குமாா் 12 ஆம் வகுப்பு வரை தனது படித்ததாகவும், இப்போது போட்டித் தோ்வுகளுக்குத் தயாராவதற்காக ரோகினியில் உள்ள ஒரு உறவினருடன் வசித்து வருவதாகவும் கூறினாா். தனது போலி அடையாளத்தின் மூலம் நட்பு கொண்ட பெண்களில் ஒருவரைச் சந்திக்க விமான நிலையத்திற்கு வந்ததாக அவா் புலனாய்வாளா்களிடம் கூறினாா்‘ என கூறப்பட்டுள்ளது.
இறுதியாக அந்த அறிக்கையில், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட செல்லிடப்பேசியில் அவா் போலீஸ் சீருடையில் இருந்த பல புகைப்படங்கள் இருந்தன, இது ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டுகளை மேலும் ஆதரிக்கிறது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் போலி தில்லி போலீஸ் அடையாள அட்டை, போலி நியமனக் கடிதம், டிபிஏ முத்திரைகளைக் கொண்ட வெற்று பக்கங்கள், போலி ஆவணங்கள் மற்றும் தகவல் தொடா்பு மற்றும் தவறாக சித்தரிக்க பயன்படுத்தப்படும் செல்லிடப்பேசி ஆகியவை அடங்கும். சாஹில் குமாா் தனது போலி அடையாளத்தை வேறு ஏதேனும் குற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறாரா என்பதைக் கண்டறியும் கோணத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.