ANI_20250407155130

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் பெயர்களை தவறாக உச்சரித்தார்.

அவர் பேசுகையில் “திரௌபதி முர்முவையும் ராம்நாத் கோவிந்தையும் நாட்டின் குடியரசுத் தலைவராக்கியது பற்றியே பாஜக எப்போதும் பேசிவருகிறது. நமது சொத்துகள், காடுகள், நிலம் மற்றும் நீர் ஆகியவற்றைப் பறிப்பதற்காக அக்கட்சி இதைச் செய்ததா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், கார்கேவின் பேச்சு தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, புது தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியுள்ளார்.

இது காங்கிரஸின் மரபணுவில் தலித் விரோத, ஆதிவாசி விரோத, அரசியல் சாசன விரோத மனப்போக்கு கலந்திருப்பதைக் காட்டுகிறது.

ராம்நாத் கோவிந்தை கோவிட் என்று கார்கே தனது உரையில் குறிப்பிட்டார். திரௌபதி முர்முவை முர்மா என்று அவர் உச்சரித்தார்.

மேலும் குடியரசுத் தலைவரை நில மாஃபியா என்றும் கார்கே குறிப்பிட்டார். சொத்துகளையும், காடுகளையும் மக்களிடம் இருந்து பறிப்பதற்காகவே திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானதாகவும் அவர் தெரிவித்தார்.

திரௌபதி முர்முவுக்கும், ராம்நாத் கோவிந்துக்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கண்ட இரு தலைவர்களை அவமதித்தது மட்டுமின்றி ஆதிவாசி மற்றும் தலித் சமூகத்தினரின் உணர்வுகளையும் கார்கே காயப்படுத்தியுள்ளார்.

கார்கே தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக அக்கட்சித் தொண்டர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

காங்கிரஸும் கார்கேயும் மன்னிப்பு கேட்காவிட்டால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். அது காங்கிரஸை பாதிக்கும்.

காங்கிரஸ் கட்சியில் ரிமோட் கன்ட்ரோல் சாதனத்தால் இயக்கப்படும் தலைவராக கார்கே இருக்கிறார். ராகுல் காந்தியின் தூண்டுதலின்பேரில் அவர் ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கார்கேவையும் காங்கிரஸையும் ஒட்டுமொத்த இந்தியா, ஆதிவாசி மற்றும் தலித் சமூகங்கள் ஆகியவை கண்டிக்கின்றன என்றார் அவர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest