
குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறுவது வன்முறை என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.
மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் ’பறந்து போ’. இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து இருக்கிறார்.
குழந்தை மற்றும் பெற்றோருக்கு இடையேயான உறவு குறித்து கூறும் இப்படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து படக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இயக்குநர் ராம், மிர்ச்சி சிவா, மிதுன் ஆகியோர் மதுரை வெற்றி சினிமாஸ் திரையரங்கிற்கு வருகை தந்து பறந்து போ திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தனர். அதன்பின் தியேட்டரில் பார்த்த ரசிகர்களிடம் தங்களுக்கு பிடித்தக் காட்சி எது என்பது குறித்து கேட்டறிந்தனர்.
இதையடுத்து இயக்குனர் ராம் மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்கள். இதில் இயக்குநர் ராம் பேசுகையில், குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் என குறிப்பிடுவதே வன்முறையான விஷயம் எனக் கூறினார்.
அந்தந்த வயது குழந்தைகள், அந்தந்த வயதுக்கு ஏற்ப நடக்கிறார்கள், ஆனால் அதை பெற்றோர்கள் புரிந்துக் கொள்வதில்லை எனக் குறிப்பிட்டார்.
90ஸ் கிட்ஸ் அப்பாக்கள் தைரியமாக பிள்ளைகளை வெளியே விடுவார்கள், சுதந்திரம் அதிகமாகக் கொடுத்தார்கள், ஆனால் இப்போது உள்ள அப்பாக்கள் குழந்தைகளைப் பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்கள், சுதந்திரம் குறைவாகக் கொடுக்கிறார்கள் என்றார்.
நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், சுந்தர் சி உடன் கலகலப்பு 3 படத்தில் நடிக்க உள்ளேன். எத்தனை படம் நடித்தாலும் எனக்கு பறந்து போ படம் ஸ்பெஷல், இயக்குனர் ராம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது 18 வருட கனவு. நான் இதுவரை சம்பளத்திற்கு மெனக்கிட்டது இல்லை, படம் வெற்றியடைய வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்.
Director Ram has said that calling children hyperactive is violence.
இதையும் படிக்க: ஒரே நாளில் வெளியாகும் பிரபாஸ், ரன்வீர் சிங் படங்கள்!