
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கேரள சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்த பணியமர்த்தப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்தவர்களை மத்திய அரசு கண்காணித்து, கைது செய்தது. அந்த வகையில், இந்திய ராணுவ ரகசியங்களை, முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததால், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1.37 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட 33 வயதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் (ஹரியாணா) அடங்குவார்.
இவர் பற்றிய புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. அதாவது, கேரள சுற்றுலாத் துறை, இவரை, கேரளத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் குறித்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விளம்பரப்படுத்த பணியமர்த்தியிருந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
கடந்த 2024 – 25 காலக்கட்டத்தில், சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்த சிலரை பட்டியலிட்டு, அவர்களை கேரளம் அழைத்து வந்து, கேரள சுற்றுலா தலங்களை விளம்பரப்படுத்த பணியமர்த்தியிருக்கிறது. அந்த வகையில் கேரளம் அழைத்து வரப்பட்ட ஜோதி, பல்வேறு இடங்களுக்குச் சென்று விடியோ எடுத்த அதனை அவரது தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது போக்குவரத்து, தங்குமிடம் என அனைத்துச் செலவுகளையும் கேரள அரசே செய்திருக்கிறது.
அந்த வகையில், கேரளத்தின் கன்னூர், கோழிக்கோடு, கொச்சி என பல இடங்களுக்கு அவர் நேரில் சென்று விடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். தெய்யம் விழாவில், கன்னூரில் அவர் கேரளத்தின் பாரம்பரிய புடவை அணிந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற விடியோவும் இடம்பெற்றுள்ளது.
ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு, அவர் பற்றி விசாரணை நடத்தியதில், அவர் பாகிஸ்தானுக்கு பல முறை சென்று வந்திருப்பதும், பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் அவர் நேரடி தொடர்பு கொண்டிருந்தார் என்றும் பாகிஸ்தானுக்கு செல்ல ஏஜென்ட் விசா பெறும்போது, இந்தியாவில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் (தற்போது நாடுகடத்தப்பட்டவர்) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதும். அவர் மூலமாக, பாகிஸ்தானில் உளவு நிறுவனங்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும், பல்வேறு இடங்களுக்கு சென்று, அதனை விடியோவாக யூடியூப் தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதால், பாகிஸ்தானுக்கும் சென்று விடியோ எடுப்பது போன்று, அங்கிருந்தவர்களுடன் பழக்கத்தை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். வாட்ஸ்ஆப், டெலிகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட செயலிகள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், சந்தேகம் ஏற்படாமலிருக்க, அவர்களின் எண்களை இந்துக்கள் பெயர்களில் பதிவு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து, இந்திய ராணுவம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பல தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் ஜோதி மல்ஹோத்ரா ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. மக்கள் அதிகமாகக் கூடும் சுற்றுலாத் தலங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள், கட்சிக் கூட்டங்கள் பற்றிய தகவல்களை இவர் பகிர்ந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
YouTuber Jyoti Malhotra, who was arrested for spying for Pakistan, was hired to promote Kerala tourism, it has been confirmed under the Right to Information Act.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்… என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?