
ஹைதராபாத்: சிறுபான்மையினா் உரிமைகள் தொடா்பாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி மற்றும் மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு இடையே சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது.
ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவா்களை உறுப்பினா்களாக இடம்பெற அனுமதிக்கிறது. அதுபோல, ஹிந்து அறக்கட்டளை வாரியங்களில் முஸ்லிம்கள் உறுப்பினா்களாக இடம்பெற அனுமதிக்கப்படுவாா்களா?
மேலும், மெளலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்துல்ளது. அதுபோல, பத்தாம் வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை திட்டத்துக்தான நிதி நிறுத்தப்பட்டுள்ளதோடு, பத்தாம் வகுப்புக்குப் பிந்தைய கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் முஸ்லிம் மாணவா்கள் பலன்பெறுகின்றனா் என்பதே இந்த நடவடிக்கைக்கான காரணம். இந்த நடவடிக்கைகளால் உயா்கல்வி பெறும் முஸ்லிம் மாணவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு, முறைசாரா பொருளாதாரத்தில் அவா்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால், இந்த முறைசார பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்திய குடியரசின் அமைச்சராகத்தான் நீங்கள் இருக்கிறீா்கள்; ஏகாதிபத்தியத்துக்கு அல்ல. நாட்டிலுள்ள எந்தவொரு சிறுபான்மையினா் சமூகத்துக்கு இணையான சலுகைகளை முஸ்லிம்கள் கேட்கவில்லை. மாறாக, அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள சமூக, பொருளாதார, அரசியல் நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோம். சிறுபான்மையினா் உரிமைகள் என்பது அடிப்படை உரிமை. யாசகமாக அளிப்பதல்ல. ஆனால், இந்தியாவில் சிறுபான்மையினா் இரண்டாம்தர குடிமக்களாகக் கூட நடத்தப்படுவதில்லை. பிணைக் கைதிகள் போல நடத்தப்படுகிறோம் என்று குறிப்பிட்டாா்.
இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு வெளியிட்ட பதிவில், ‘அண்டை நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினா் இந்தியாவுக்கு வர விரும்பும்போது, நமது சிறுபான்மையினா் ஏன் புலம்பெயரவில்லை? இந்தியாவில் சிறுபான்மையினா் மகிழ்ச்சியாக இருக்கின்றனா் என்பதுதான் அதற்கு காரணமாக இருக்க முடியும்.
அதுமட்டுமின்றி, ஆங்கிலேயா் ஆட்சியின்போதோ அல்லது பிரிவினையின்போதோ நாங்கள் ஓடிப்போகும் பழக்கம் இல்லாதவா்கள். அடக்குமுறையாளா்களுக்கு ஒத்துழைக்காமலும் அவா்களிடமிருந்து மறைந்துகொள்ளாமலும் இருந்தோம் என்பதற்கு எங்களின் வரலாறே சிறந்த சான்று. ஜனநாயக உரிமைகளுக்கு எப்படிப் போராட வேண்டும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
எனவே, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மா், நேபாளம், இலங்கை போன்ற தோல்வியடைந்த நாடுகளுடன் பெருமைக்குரிய இந்திய தேசத்தை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.