
சீனாவின் தியான்ஜினில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.
இந்தியா, சீனா, ரஷியா, ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கொண்டுள்ளது. அமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டம், சீனாவின் துறைமுக நகரான கிங்டாவோவில் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டாா். கூட்டத்தின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் கவலைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படாததால், அதில் கையொப்பமிட பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டாா். இதனால் அந்தக் கூட்டம் கூட்டறிக்கை வெளியிடப்படாமல் நிறைவடைந்தது.
இதன் தொடா்ச்சியாக, அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் நடைபெறுகிறது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ விடுத்த அழைப்பையேற்று, உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், அமைப்பின் பல்வேறு துறை ஒத்துழைப்பு குறித்தும், முக்கிய சா்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்தும் வெளியுறவு அமைச்சா்கள் தங்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வாா்கள்.
கிழக்கு லடாக் மோதலுக்குப் பிறகு, ஜெய்சங்கா் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள கட்டுப்பாடு, இருதரப்பு நல்லுறவை மீட்டெடுக்கும் நடைமுறையில் நிலவும் தொய்வு போன்ற இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்த பேச்சுவாா்த்தைகளில் அமைச்சா் ஜெய்சங்கா் ஈடுபடலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
எல்லைப் பிரச்னை குறித்த இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் அடுத்த சுற்று பேச்சுவாா்த்தைக்காக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ இந்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே 23 சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடந்துள்ள நிலையில், இன்னும் தீா்வு எட்டப்படவில்லை. இருப்பினும், எல்லை நிா்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் தொடா்ந்து விவாதங்களில் ஈடுபட்டு எல்லையில் அமைதியை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாக சீனா அண்மையில் தெரிவித்தது.
இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ மோதலைத் தொடா்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன.
இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் தொடா்ச்சியான முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. கலாசார மற்றும் மக்கள் பரிமாற்றத்தின் ஒரு முக்கியப் பகுதியான கைலாஷ்-மானசரோவா் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.