
புது தில்லி: இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியதை வரவேற்று மத்திய அமைச்சரவை புதன்கிழமை(ஜூலை 16) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
சுக்லாவுடன் திட்ட கமாண்டா் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோா் கபு ஆகியோரும் சா்வதேச விண்வெளி நிலையத்தைக் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இவா்கள் நால்வரும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுமாா் 433 மணிநேரம் செலவழித்துள்ளனா்.
சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனையை நிகழ்த்திய சுக்லா உள்பட 4 வீரா்களும் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) பகல் 3 மணியளவில் பூமியில் பத்திரமாக தரையிறங்கினர்.
இது குறித்து புதன்கிழமை(ஜூலை 16) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தபின் செய்தியாளர்களுடன் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “இது ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை, புகழ், மகிழ்ச்சியான தருணம். இன்று இந்த தேசத்துடன் சேர்ந்து மத்திய அமைச்சரவை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை பாராட்டுகிறது. இந்திய விண்வெளி திட்டத்தில் இதுவொரு புது சகாப்தம்” என்றார்.