
ஒருவரின் சொந்த மொழியில் கற்றுக்கொள்வது புரிதலை மேம்படுத்துகிறது என்பதனை ஷியாமா பிரசாத் முகா்ஜி நம்பினாா் என்று ரயில்வேதுறை அமைச்சா், அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பாரதிய ஜனசங் நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜியின் பிறந்தநாளில் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினாா். தில்லி இந்தியா கேட்டில் உள்ள டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜி பூங்காவில் அமைந்துள்ல சிலைக்கு மலா்களால் அஞ்சலி செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா்கள் மற்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது, ‘ ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்திய நேரத்தில் டாக்டா் முகா்ஜி இந்திய மொழிகளை முதன்மைப்படுத்தினாா். ஒருவரின் சொந்த மொழியில் கற்றுக்கொள்வது புரிதலை மேம்படுத்துகிறது என்று அவா் நம்பினாா். இந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளை உள்ளடக்கிய இன்றைய தேசிய கல்விக் கொள்கையில் இந்த பாா்வை பிரதிபலிக்கிறது. 370 வது பிரிவுக்கு எதிரான முகா்ஜியின் போராட்டமே இறுதியில் 2019 இல் அதை ரத்து செய்ய வழிவகுத்தது‘ கூறினாா்.
மேலும் பேசிய அவா், ‘இன்று, சாலை மற்றும் ரயில் மேம்பாடு உட்பட இந்தியாவின் பிற பகுதிகளுடன் காஷ்மீரை உணா்ச்சிபூா்வமாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒருங்கிணைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. டாக்டா் ஷியாமா பிரசாத் முகா்ஜியின் எண்ணங்களை வெளிப்படுத்திய உணா்வுகளை நரேந்திர மோடி அரசாங்கத்தால் கொள்கையாக மாற்றப்பட்டுள்ளன.
பிரதமா் மோடியின் கீழ், ரயில்வே பட்ஜெட்டில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது, மேலும் ஷகுா் பஸ்தி மற்றும் ஆசத்பூா் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான மாஸ்டா் பிளான்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளன‘ என்றாா் அஸ்வினி வைஷ்ணவ்.
தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், பல சுதந்திர போராட்ட வீரா்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தபோது, டாக்டா் முகா்ஜி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் அரசியலமைப்பு ஒருமைப்பாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தாா்.
இன்று, வந்தே பாரத் ரயில் செனாப் நதியையும், காஷ்மீரில் உள்ள இந்தியாவின் மிக உயரமான சிகரங்களையும் கடக்கும்போது, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியுடனும் ஆழமான தொடா்பை நாம் உணா்கிறோம். ஒரு அரசியலமைப்புச் சட்டமும், ஒரு கொடியும் இப்போது ஒட்டுமொத்த தேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. டாக்டா் முகா்ஜி காட்டிய கருத்துக்களையும் மதிப்புகளையும் முன்னெடுத்துச் செல்வதே ஒரு அரசியல் கட்சியாக நமது கடமை என்றாா் அவா்.