
லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட்டில், இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் ஒரே ஸ்கோரை (387) பதிவு செய்தன. இதனால், 2-ஆவது இன்னிங்ஸ் சமநிலையுடனேயே தொடங்கியது. 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 193 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 58 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவையிருக்க, அணியின் வசம் 6 விக்கெட்டுகளே இருந்தன.
இந்தநிலையில், 3-ஆவது டெஸ்ட்டில் கடைசி நாளான இன்று(ஜூலை 14) உணவு இடைவேளைக்குப்பின் இந்திய அணியின் வெற்றிக்கு 60-க்கும் குறைவான ரன்களே தேவைப்பட்டது. இன்னொருபுறம் கைவசம் 2 விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தன.
இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடித்து அணியை தனியொருவனாக கரைசேர்க்கப் போராடிய ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்தார். அவர் 181 பந்துகளை சந்தித்து 61 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு பக்கபலமாக ஜஸ்ப்ரித் பும்ரா நல்ல பார்ட்னர்ஷிப் அளித்தார். இருவரும் சேர்ந்து 132 பந்துகளைச் சந்தித்து ஒட்டுமொத்தமாக 35 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் பும்ரா ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் இங்கிலாந்து வசம் சென்றது.
கடைசியில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ப்ரைடன் கார்ஸ் 2, க்றிஸ் வோக்ஸ், ஷோயைப் பஷீர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
ஸ்கோர் கார்டு:
முதல் இன்னிங்ஸில்
-
இங்கிலாந்து – 387/10
-
இந்தியா – 387/10
இரண்டாவது இன்னிங்ஸில்
-
இங்கிலாந்து – 192/10
-
இந்தியா – 170/10
22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி