
தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நாளை (செப் 20) சனிக்கிழமை நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்,
இந்த பிரசாரத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது, அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்று தவெக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

புத்தூர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலை அருகே பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி அளித்துள்ள காவல்துறை, இதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளைக் காணலாம்.
காவல்துறை விதித்த நிபந்தனைகள்
பரப்புரையில் நண்பகல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்.
கட்சித் தலைவர் விஜய் செல்லும் பகுதியில், 2 பிரதான கட்சி அலுவலகங்கள் இருப்பதால், பிரச்னைகள் ஏதும் ஏற்படாதவாறு தன்னார்வலர்களை வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
ரவுண்டானா பகுதியானது, தமிழ்நாடு – புதுவை எல்லை என்பதால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படக் கூடாது.
விஜய்யின் பரப்புரை வாகனத்தின் பின்னே 5 வாகனங்களுக்குமேல் செல்லக் கூடாது.
பரப்புரைக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு பார்க்கிங் வசதியை தாங்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
பொதுச்சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. சேதமடையும் பொதுச் சொத்துகளுக்கு கட்சியே பொறுப்பேற்க வேண்டும்.
பெண்கள் மற்றும் பெரியவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
35 நிமிடங்கள் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள வேண்டும். உட்பட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கடைபிடிக்கத் தவறினால் பரப்புரையை இடையிலேயே நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
மின்சாரத்தை நிறுத்த மனு
நாகையில் விஜய் சாலை மார்க்கமாக வாஞ்சூர் ரவுண்டாணா, தொடங்கி நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து அவ்வழியாக பரப்புரை செய்யவுள்ள புத்தூர் அண்ணா சிலை அருகில் வருகைபுரிந்து மக்களைச் சந்தித்து உரையாற்றவுள்ளார்.
இவ்வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் விஜய்யின் நிகழ்வு தொடங்கி முடியும்வரை அவ்வழியில் உள்ள வழித்தடங்களில் மின் நிறுத்தம் செய்து தரும்படிபயும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிடுமாறும் மின் பொறியாளர் அலுவலகத்தில் தவெக-வின் நாகை மாவட்டச் செயலாளர் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.