
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 25-ம் தேதியிலிருந்து `தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்கிற தலைப்பில், நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.
நேற்று (ஆகஸ்ட் 3) இரவு வேலூரில் நடைப்பயணம் மேற்கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், “இந்த மாவட்டத்தில்தான் நீர்வளத்துறை அமைச்சர் இருக்கிறார். அவர் காலத்தில் எங்கேயாவது ஒரு தடுப்பணையைக் கட்டியிருக்கலாம். பாலாற்றில்கூட ஒரு தடுப்பணை கட்டவில்லை’’ எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
அன்புமணியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பதிலளித்திருக்கிறார். இது சம்பந்தமாக துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த அன்புமணி தன்னுடைய தந்தையான டாக்டர் அய்யா அவர்களை எதிர்த்து ரத கஜ துரக பதாதிகளுடன் தமிழகத்தில் திக் விஜயம் செய்யப் புறப்பட்டிருக்கிறார்.

இது குறித்து, கருத்துச் சொல்ல நமக்கு உரிமையில்லை; நாம் சொல்லப் போவதுமில்லை. ஆனால், இந்த திக் விஜயத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார். அவர் பேசுகிறபோது, என் மீது ஒரு சிறிய பாச மழையைப் பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் குறித்து விவரம் தெரியாமல், கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார்.
அதாவது, `இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?’ என்று முழக்கமிட்டிருக்கிறார். அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன்.
ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார். தலைவர் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக, நான் இந்தத் துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்தக் காலத்திலும்… பாலாற்றில் இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன்.

கவுண்டன்யா நதியில் ஜங்கலாப்பள்ளி, செதுக்கரையிலும், பொன்னையாற்றில் பரமசாத்து – பொன்னை இடையேயும், குகையநல்லூரிலும், பாம்பாற்றில் மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளியிலும், கொசஸ்தலையாற்றில் கரியகூடல் இடத்திலும், அகரம் ஆற்றில் கோவிந்தப்பாடியிலும், மலட்டாற்றில் நரியம்பட்டு பகுதியிலும், வெள்ளக்கல் கானாற்றில் பெரியாங்குப்பத்திலும், கானாற்றில் சின்னவேப்பம்பட்டு பகுதியிலும் தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறேன்.
இந்த ஆண்டு, அம்பலூர், பாப்பனபள்ளி – செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய இடங்களிலும் தடுப்பணைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள். இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுச் சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது’’ என்று அறிவுறுத்தியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.