
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த எதிர்ப்பு முன்னணி (The Resistance Front (TRF)) என்ற அமைப்பை அமெரிக்க அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
இந்த நடவடிக்கை தீவிரவாத எதிர்ப்பில் இந்தியா – அமெரிக்காவின் ஒருங்கிணைவை வலுவாக உறுதிப்படுத்தியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான TRF-ஐ வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக (Foreign Terrorist Organization (FTO)) அறிவித்தமைக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அவரது துறையைப் பாராட்டியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும், பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதிலும் இந்தியா உலகநாடுகளின் ஒத்துழைப்பின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்காவின் முடிவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இந்தியா-அமெரிக்காவின் ஆழமான ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது…

‘பயங்கரவாதத்துக்கு எதிராக ஜீரோ சகிப்புத்தன்மை’ என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகளும் அதன் தலைவர்களும் கேள்விகேட்கப்படுவதை உறுதி செய்ய இந்தியா அதன் சர்வதேச கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படும்.” எனக் கூறப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மீது தீவிரவாதிகள் நடத்திய மிக மோசமான தாக்குதலாக பஹல்கான் தாக்குதல் அமைந்தது. அப்போது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவிற்கு அமெரிக்காவின் “வலுவான ஆதரவை” வலியுறுத்தினார்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு எதிர்வினையாக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற தூதுக்குழு வாஷிங்டனில் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸிடம் எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.