
நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதில் சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்களின் பெயரைத்தான் நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் வாக்காளர்களை நீக்கி வெற்றி பெற பாஜக முயல்வதாக எதிா்க்கட்சிகள் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் திமுக எம்.பி. திருச்சி சிவா நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
“பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் கோருகின்றன. அதாவது இரண்டு விஷயங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம் தொடங்கியுள்ளது.
அதேபோல பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரு எரிந்துகொண்டிருக்கும் பிரச்னை. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல். ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை என்பது மிகவும் அடிப்படையான உரிமை. அதன் மூலமாகவே அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் வாக்குரிமையே இல்லை என்றால் குடிமகனாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
வாக்குரிமையை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. இதுபற்றி அரசு கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். விவாதித்து நாம் முடிவெடுப்போம்.
பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. மத்திய உள்துறை அமைச்சர் மிகவும் அரிதாகவே நாடாளுமன்றத்திற்கு வருவார். பொறுப்புமிக்கவர்கள் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வருகிறார்கள். நாடாளுமன்றம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. நாங்கள் ஜனநாயகத்தை மீட்டெடுக்க விரும்புகிறோம். அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் பதிலளிக்க வேண்டும்” என்று பேசினார்.
DMK MP Tiruchi Siva says that Prime Minister does not come to the Parliament. Union Home Minister comes rarely to the Parliament.
இதையும் படிக்க | இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? ராஜ்நாத் சிங் சூசகம்!