
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, திமுகவின் கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பதாகைகள் ஏந்தி எம்பிக்கள் முழக்கமிட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கி, செவ்வாய்க்கிழமை முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.