Sonia-rahum-gandhi-2025-edi

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு செய்தது, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் ஆகியவை பெரிய அளவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் துணைத் தலைவா்கள், தலைமைக் கொறடாக்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. அதேபோல பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் மத்திய அரசு கவனக்குறைவாக நடந்து கொண்டது; அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மேலும், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட்டு மத்தியஸ்தம் மூலம் அதனை முடிவுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருவது தொடா்பாக பிரதமா் மோடியை காங்கிரஸ் ஏற்கெனவே விமா்சித்து வருகிறது. இந்த விவகாரத்தையும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லாதது உள்ளிட்ட விவகாரங்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest