
ஹிமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமான கிராமத்தில் 67 பேரின் உயிரை நாய் ஒன்று காப்பாற்றிய அதிசய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இமயமலைத் தொடர்களில் பெய்துவரும் பருவமழை வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி, வடக்குப் புற மாநிலங்கள் முழுவதையும் பாடாய்படுத்தி வருகிறது.
ஹிமாசலப் பிரதேசத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் பெய்துவரும் பருவமழையால், நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளால் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கனமழையால் பெரும் பேரழிவு ஏற்பட்டு ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் 23 முறை வெள்ளப்பெருக்கும், அதைத் தொடர்ந்து 19 முறை மேக வெடிப்பு சம்பவங்களும், 16 முறை நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மண்டி மாவட்டத்தில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. திடீர் வெள்ளத்தால் மண்டியில் 156 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நாய்க்குட்டி ஒன்று சரியான நேரத்தில் குரைத்ததால், 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மண்டியின் தரம்பூர் பகுதியில் உள்ள சியாத்தி கிராமத்தில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை 1 மணி வரை பெய்த கனமழையால், அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய பலரின் வீடுகள் தரைமட்டமாகின.
இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சியாத்தி பகுதியைச் சேர்ந்த நரேந்திரா என்பவர் கூறும்போது, “வீட்டில் இரண்டாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த எங்களது நாய், மழை பெய்யத் துவங்கியதும் சத்தமாக குரைக்கத் தொடங்கியது. மேலும், தொடர்ந்து ஊளையிட்டுக் கொண்டே இருந்தது.
நாய் குரைப்பது கண்டு எழுந்த நான், என்ன ஆனது என பார்க்கச் சென்றேன். அப்போது, வீட்டின் சுவரில் பெரிய விரிசல் ஏற்பட்டு மழை தண்ணீர் எல்லாம் வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தது. உடனே நாய்யைத் தூக்கி கொண்டு கீழே இறங்கி, அங்கு தூங்கிக் கொடிருந்தவர்களை எல்லாம் எழுப்பினேன்” என்றார்.
அங்கிருந்த கிராம மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக தரைமட்டமாகின. இந்தச் சம்பவத்தில் தப்பித்தவர்கள் திரியாம்பாலா கிராமத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் கடந்த 7 நாள்களாகத் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ.10,000 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
7 நாள்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், நிலச்சரிவில் இருந்து அனைவரையும் காப்பாற்றிய சம்பவத்தில் ஒரே இரவில் மிகப் பெரிய பிரபலம் ஆகியிருக்கிறது அந்த நாய்க்குட்டி.
Dog’s Bark Saves 67 Lives As Monsoon Wipes Out Village In Himachal’s Mandi
இதையும் படிக்க : கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன்!