
தமிழகத்தில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த இரு மாவட்டங்களுக்கும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.
பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு1-இல் 50 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெயில் தாக்கம் குறைவாகவே இருந்தது. அதன்படி, தஞ்சாவூரில் மட்டும் அதிகபட்சமாக 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.