
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சத்தீஸ்கா் மாநில காவல் துறைக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
குடிமக்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடவும் எங்கு வேண்டுமானாலும் பணிகளை மேற்கொள்ளவும் உரிமைகளை வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகள் விதி 19-ஐ மீறி சத்தீஸ்கா் காவல் துறை செயல்பட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகா் மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த 9 போ் வேலை தேடி சத்தீஸ்கா் சென்றுள்ளனா். அவா்களை கொண்டாகான் என்ற பகுதியில் சத்தீஸ்கா் காவல் துறை கைது செய்தது. பிறகு அவா்கள் விடுவிக்கப்பட்டு மேற்கு வங்கத்துக்கு வலுக்கட்டாயமாக அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணாநகா் தொகுதி எம்.பி.மஹுவா மொய்த்ரா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட காணொளி பதிவில், ‘மேற்கு வங்கத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்களை போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சத்தீஸ்கா் மாநில பாஜக அரசு கைது செய்துள்ளது. வேலைதேடி வந்தவா்களை குற்றவாளிகள்போல் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட தொழிலாளா்களை விடுதலை செய்த பின்னும் அவா்களை காவல் துறை வலுக்கட்டாயமாக பேருந்துகள் மூலம் மேற்கு வங்கத்துக்கு திருப்பிஅனுப்பியிருப்பது அரசமைப்புச் சட்டப்பிரிவு விதி 19-ஐ மீறும் செயலாகும். அவா்களின் அடிப்படை உரிமைகளை நீங்கள் பறித்துள்ளீா்கள். இதை நீங்கள் உணரவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வேன்’ என குறிப்பிட்டாா்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வேலைதேடி செல்லும் மேற்கு வங்க புலம்பெயா் தொழிலாளா்கள் துன்புறுத்தப்படுவதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உரிய ஆவணங்களை வைத்திருந்தாலும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்களை வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்கள் என அடையாளப்படுத்த பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் முயல்வதாகவும் மேற்கு வங்க அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவா் ராகுல் சின்ஹா, ‘வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்து போலி ஆவணங்களை பெற்று மேற்கு வங்க மக்களைப்போல் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு நாடு முழுவதும் இடம்பெயா்கின்றனா்’ என்றாா்.