
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலி கடித்துக் குறியதில் விவசாயி உயிரிழந்தார். அங்கு கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற ஆறாவது உயிரிழப்பு இதுவாகும்.
உத்தப்ர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டம், புல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தயாராம் (39). அவர் திங்கள்கிழமை காலை தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டு, தான் கரும்பு பயிரிட்டுள்ள வயல்வெளியைப் பார்க்கச் சென்றார். அப்போது அங்கு பதுங்கியிகுந்த ஒரு புலி அவர்மீது பாய்ந்து அவரை கடித்துக்குதறியது.
அவரது கழுத்துமீதும் மார்புமீதும் தாக்குதல் நடத்திய புலி அவரை சுமார் 20 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றது. இதில் படுகாயமடைந்த தயாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக அவரது அலறல் கேட்டு அவரைக் காப்பாற்ற சில கிராமவாசிகள் ஓடி வந்தனர். எனினும் அவர்கள் வந்துசேர்வதற்குள் தயாராம் உயிரிழந்தார். அங்கு திரண்ட கூட்டத்தினரைக் கண்டு அப்புலி தப்பியோடிவிட்டது. விவசாயி தயாராமின் உயிரிழப்பை வட்டார வன அதிகாரி பரத்குமார் உறுதிப்படுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புலி தாக்கி விவசாயி தயாராம் உயிரிழந்தது அந்த கிராமவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் புலிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வனத்துறை தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உயிரிழந்த தயாராமின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவரைத் தாக்கிய புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்றும் கிராமவாசிகள் கோரியுள்ளனர்.
இந்தப் பகுதியில் தொடர்ந்து புலிகளின் நடமாட்டம் இருப்ப தாக வனத் துறையினர் மற்றும் போலீஸாரிடம் கிராமவாசிகள் தெரிவித்தனர்.
வனத்துறையிடம் இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். பிலிபிட் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் புலி தாக்குதலில் உயிரிழந்த ஆறாவது நபர் விவசாயி தயாராம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதே மாவட்டத் தில் உள்ள விவசாயி ஹன்ஸ்ராஜ் என்பவர் மே 14-ஆம் தேதியும். நான்கு தினங்கள் கழித்து ராம்பி ரசாத் என்பவர், லாங்ஸ்ரீ என்ற பெண் மே 25-ஆம் தேதியும். ரேஷ்மா என்ற பெண் ஜூன் 3-ஆம் தேதியும், ஒரு விவசாயி ஜூன் 9-ஆம் தேதியும் புலிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இதனிடையே, புலிதாக்கி உயிரிழந்த விவசாயி தயாராமின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.