
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சண்முகநாதன் அவரது வீட்டில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அவரது மனைவி தனலட்சுமி பனையப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்ற பனையப்பட்டி காவல் நிலைய போலீஸார் இறந்து கிடந்த சண்முகநாதன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு நடைப்பெற்ற உடற்கூராய்வு அறிக்கையில் சண்முகநாதன் கொலை செய்யப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி தனலட்சுமி (வயது: 45) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் கிடுக்கிப்பிடி குறுக்கு விசாரணை நடத்தினர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தனலட்சுமிக்கு சண்முகநாதன் குடித்துவிட்டு தினமும் செக்ஸ் டார்ச்சர் மற்றும் உடல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளது தெரியவந்தது.

அதோடு, இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி அவரை கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, இறந்து கிடப்பதாக போலீஸில் புகார் செய்துள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில், உடற்கூராய்வு அறிக்கையில் கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து, தனலட்சுமி தனது கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, குற்றவாளி தனலட்சுமியை பனையப்பட்டி போலீஸார் கைது செய்தனர். மதுபோதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆத்திரத்தில் அவரது மனைவியே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.