
நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் அருகில் ரேவ்தந்தா என்ற இடத்தில் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இதனை இந்திய கடற்படையினர் ரேடார் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்து கடலோர பாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டது. முப்படைகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அக்கப்பலை தேட ஆரம்பித்தனர். அது பாகிஸ்தான் மீன்பிடி படகாக இருக்கலாம் என்று கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். கடல் சீற்றம் மற்றும் காற்று, மழை போன்ற காரணங்களால் பாகிஸ்தான் படகு இந்திய எல்லைக்குள் இழுத்து வரப்பட்டு இருக்கலாம் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் கேள்விப்பட்டதும் வெடிகுண்டை கண்டு பிடித்து செயல் இழக்க செய்யும் படை, விரைவு படை, கடலோர மற்றும் கப்பல் படை பிரிவுகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறது. இந்திய எல்லைக்குள் இருக்கும் கொர்லாய் என்ற இடத்தில் இருந்து இரண்டு கடல் மைல் தூரத்தில் பாகிஸ்தான் படகு தென்பட்டது. அந்த படகை அடையாளம் காணும் முன்பாக அது மாயமாகி இருக்கிறது. கடற்படை ஹெலிகாப்டர்கள் அப்படகை தேடி வருகின்றன. ராய்கட் போலீஸ் அதிகாரி தலால் அதிகாரிகளுடன் வந்து படகு தென்பட்ட இடத்தையும் தேடும் பணியையும் நேரில் பார்வையிட்டார். கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் இரவோடு இரவாக மும்பைக்குள் நுழைந்து மூன்று நாள் தாக்குதல் நடத்தினர். இப்போதும் மும்பை அருகில் பாகிஸ்தான் படகு தென்பட்டுள்ளது. இதனால் மும்பை, ராய்கட் கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.