
தோஹா: இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும் ஆனால், இந்தியா நிராகரிக்கிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தர் தெரிவித்துள்ளார்.
தோஹாவில் நடைபெற்ற அரபு – இஸ்லாமிய அவசர உச்சிமாநாட்டின் இடையே பேட்டியளித்த இஷாக் தர், இந்தியா உடனான விவகாரம், கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: இந்தியா உடனான இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதில் எங்களுக்கு (பாகிஸ்தானுக்கு) ஆட்சேபனை இல்லை. ஆனால், இது இரு தரப்பு விவகாரம் என கூறி மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. கடந்த ஜூலை 25ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்து, இந்தியாவுடனான பேச்சுவார்த்தை என்ன ஆனது என்று கேட்டேன். அதற்கு அவர், இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறுகிறது என தெரிவித்தார்.