
திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு செல்லவுள்ளது.
பிரிட்டன் எப்-35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறி, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூன் 14 ஆம் தேதியில் அவசரமாக தரையிறங்கியது.
இந்த நிலையில், ஒருமாத காலத்துக்குப் பின்னர், பழுதுநீக்கப்பட்டு ஜூலை 23 ஆம் தேதியில் தாய்நாட்டுக்கு செல்லவுள்ளதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் கப்பற்படைக்கு சொந்தமான இந்த விமானத்தை மீண்டும் பறக்கவைக்க முயன்றபோது, பழுதாகிப் போனதாகக் கூறினர். இதனையடுத்து, பழுதுநீக்கத்துக்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே இருந்ததால், மீம்ஸ் விமர்சனத்துக்கும் இந்த விமானம் ஆளானது. கேரள சுற்றுலாத் துறையும் தனது பங்குக்கு பிரிட்டன் விமானம் தொடர்பான மீம்ஸ் ஒன்றை வெளியிட்டது.
அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருப்பதாகக் கூறப்படும் இந்த ரக விமானம், போர்க்களத்தில் சிறப்பு வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. போர்க்களத்தின் முழுக் காட்சியையும் விமானிகளுக்கு காட்டும் தொழில்நுட்ப சென்சார்கள் கொண்டிருக்கும் இந்த விமானம், 51 அடி நீளமும், 7,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனுடையது. இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர் (ரூ. 859 கோடி) என்கின்றனர். இந்த விமானத்தின் அருகே யாரையும் செல்லவிடாமல், அதனருகே விமானி ஒருவரும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
இந்த நிலையில்தான், விமானம் பழுதாகியதால், அதனைச் சரிசெய்ய 25 பேர் கொண்ட பிரிட்டன் விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.
இதையும் படிக்க: இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!