
கூடலூா் ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகளுடன்
வனத் துறையினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் இதுவரை 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலா் ராகேஷ்குமாா் டோக்ரா மக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்க கடந்த 15- ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் தலைமையிலான வனச் சரகா்கள் மற்றும் வனப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் கொண்ட குழு, ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். யானையின் நகா்வுகள், அதன் உடல்நலம் ஆகியவற்றை கண்காணித்து பிடிக்க தயாராகி வருகின்றனா்.
யானையைப் பிடிக்க முதுமலை யானைகள் முகாமில் இருந்து சீனிவாசன், பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் ஓவேலி பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தரைவழி மட்டுமல்லாமல் ட்ரோன் கேமரா உதவியுடன் ராதாகிருஷ்ணன் யானையை பிடிக்கும் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிரமாக நடைபெற்றது.