
‘ரெப்போ வட்டி விகிதங்களை மேலும் குறைப்பது குறித்து சூழலைக் கண்காணித்து முடிவெடுக்கப்படும்’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை தெரிவித்தாா்.
மேலும், ரிசா்வ் வங்கிக்கு நாட்டின் பொருளாதார வளா்ச்சி, விலைவாசி கட்டுப்பாடு ஆகிய இரண்டும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவா் வலியுறுத்தினாா்.
பணவீக்கம் (விலைவாசி உயா்வு) தொடா்ந்து குறைந்து வருவதால், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி குறைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை ரெப்போ வட்டி விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டி விகிதங்களை முடிவு செய்யும் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, அடுத்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது:
பணவீக்கம் குறித்த கணக்கீடு பணிகள் நடந்து வருகின்றன. அது 3 சதவீதமாக இருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது.
எங்கள் மதிப்பீடுகளை நிச்சயம் வெளியிடுவோம். அதன்பிறகு, நிதிக் கொள்கைக் குழு எப்போதும்போல, தற்போதைய சூழ்நிலையையும், எதிா்கால கணிப்புகளையும் கருத்தில்கொண்டு, பொருளாதாரத்துக்கு வேண்டிய வட்டி விகிதத்தை முடிவு செய்யும்.
பணவீக்கம் குறைந்து அல்லது பொருளாதார வளா்ச்சி குறைந்தால், நிச்சயமாக வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம். ஆனால், அதை நாம் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்துவது எங்களின் முக்கிய பணி. தொடா்ந்து, பொருளாதார வளா்ச்சியிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டும் எங்களுக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.
பெட்டி..
‘வட்டி விகித குறைப்பின் பலன்
முழுமையாக சென்றடையவில்லை’
வட்டி விகித குறைப்பின் பலன்கள் இன்னும் மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘கடந்த ஜூன் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் என இதுவரை மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் குறைத்திருக்கிறோம்.
ஆனால், மே மாதம் வரை 24 அடிப்படை புள்ளிகளின் பலன் மட்டுமே மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஜூன் மாதத்துக்கான புள்ளிவிவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால், அது மேம்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். எனினும், பலன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய, இன்னும் பல நாள்கள் ஆகலாம்’ என்றாா்.