
லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு பதிலடி கொடுப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 10) லார்ட்ஸ் திடலில் தொடங்கவுள்ளது.
பதிலடி கொடுப்போம்
இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் நாளை லார்ட்ஸில் தொடங்கவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்கும் என அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்த டெஸ்ட் தொடரில் ஏற்ற, இறக்கங்கள் என்பது இருக்கத்தான் செய்யும். ஏனெனில், இரண்டு சிறந்த அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும்போது, இந்த ஏற்ற, இறக்கங்கள் இருப்பது சகஜம். முதல் டெஸ்ட்டில் நாங்கள் வெற்றி பெற்றோம். இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. மற்ற அணிகள் அனைத்தையும் காட்டிலும் இங்கிலாந்து அணி சிறப்பானது என நினைப்பதாக நினைக்கவில்லை. எங்களது எதிரணி யாராக இருந்தாலும், அவர்களை நாங்கள் மதிக்கிறோம். இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லார்ட்ஸ் டெஸ்ட்டில் விளையாடுவோம். லார்ட்ஸ் டெஸ்ட்டில் வெற்றி பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது உண்மையில் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அவருக்கும் மிகப் பெரிய விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன். காயங்கள் காரணமாக பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து அதிலிருந்து ஆர்ச்சர் மீண்டு வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. அவர் மீண்டும் அணிக்காக விளையாடவுள்ளது உற்சாகமாக உள்ளது. காயத்திலிருந்து மீண்டு விளையாடவுள்ளதை நினைத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பெருமைப்படுவார் என நினைக்கிறேன் என்றார்.
England captain Ben Stokes has said that they will hit hard against the Indian team in the Lord’s Test.
இதையும் படிக்க: 3-வது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்ப்பு!