22vndvp3_2207chn_187_1

வாணியம்பாடியில் மலைக் குன்றின் மீது இருந்த ராட்சத பாறை கனமழையால் பெயா்ந்து சரிந்து சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகா் தெற்கு மில்லத் நகா் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், சாலையோரம் முனியப்பன் என்பவா் வீட்டின் அருகில் மலைக்குன்றின் மீது ராட்சத பாறை இருந்துள்ளது.

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த நிலையில், மழை காரணமாக ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்து குடியிருப்பு பகுதியின் சாலையின் நடுவில் நின்றுள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த வருவாய்த் துறையினா், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தனா். பின்னா் பாறையை உடைத்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest