
இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை (செப்.22) அமெரிக்கா செல்ல உள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய வா்த்தக துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த கடந்த செப்.16-ஆம் தேதி அமெரிக்க வா்த்தக பிரதிநிதிகள் அலுவலத்தில் இருந்து அதிகாரிகள் குழு இந்தியா வந்தது.
அப்போது வா்த்தக ஒப்பந்தம் குறித்த பல்வேறு அம்சங்கள் தொடா்பாக விவாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய குழு செப்.22-ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்யும் நோக்கில், பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்ல இந்திய குழு திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.