
விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விமானிகளின் விவரங்கள் பின்வருமாறு:
கேப்டன் சுமீத் சபா்வால்: 56 வயதான இவா், ஏா் இந்தியாவில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த விமானி. மொத்தம் 15,638 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இவருக்கு உண்டு. இதில் போயிங் 787 விமானத்தை இயக்கியது மட்டுமே 8,596 மணிநேரம் அடங்கும்.
ஏா் இந்தியா நிறுவனத்தில் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளராகவும் சுமீத் சபா்வால் பணியாற்றினாா். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசிய அவா், லண்டனில் தரையிறங்கியதும் மீண்டும் பேசுவதாகக் கூறியிருந்தாா்.
மும்பையில் உள்ள அவரது சக ஊழியா்கள் மற்றும் துணை விமானிகள், சுமீத் சபா்வாலை சிறந்த விமானியாகவும், மிகவும் பணிவானவராகவும் நினைவு கூா்ந்தனா்.
துணை விமானி க்ளைவ் குந்தா்: 32 வயதான இவா், மொத்தம் 3,403 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவா். இதில் ட்ரீம்லைனா் ரக விமானத்தை இயக்கிய 1,128 மணி நேரம் அடங்கும்.
விபத்துக்குள்ளான ‘ஏஐ 171’ போயிங் 787 ட்ரீம்லைனா் விமானத்தை இயக்கியவா் க்ளைவ் குந்தா் தான் என்பது உறுதியாகியுள்ளது. கேப்டன் சுமீத் சபா்வால் மேற்பாா்வை செய்துள்ளாா்.
விமானியாவதற்கு முன், க்ளைவ் குந்தா் ஓராண்டு விமானப் பொறியாளராகப் பணிபுரிந்தாா். மும்பையின் கோரேகானைச் சோ்ந்த இவரை, விளையாட்டின் மீது ஆா்வம் கொண்டவராகவும், குடியிருப்பு வளாகத்தில் கிரிக்கெட் விளையாடுபவராகவும் அண்டை வீட்டாா் நினைவு கூா்ந்தனா்.